Tuesday, April 11, 2006

நான் நாத்திகவாதியா? ஆத்திகவாதியா?

திரு.ஜோசப் அவர்களுக்கும், முத்து தமிழினிக்கும் நடைபெற்றுவரும் விவாதங்களைப் படித்த போது நான் நாத்திகவாதியா? ஆத்திகவாதியா? திராவிடனா? எனக் கேள்வி எழுந்தது, என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

பல காலமாக எனக்கு இது பெரும் குழப்பமாகவே இருந்து வந்துள்ளது. கோவிலுக்கு எப்போதாவது போவது உண்டு, ஆனால் மனதை
ஒரு முகப்படுத்தி கடவுளை வணங்குவது இல்லை. கடவுளிடமும் எதுவும் பெரிதாக வேண்டிக் கொள்வதும் இல்லை.
தினமும் விபூதி, குங்குமம் பூசிக் கொள்வது இல்லை. நண்பர்கள் கோவிலுக்கு அழைக்கும் போது அங்கு கூடும் மக்களைப்
பார்ப்பதற்கே பெரும்பாலும் செல்கிறேன்.

நாள் கிழமை பார்த்தெல்லாம் சைவம்/அசைவம் எனச் சாப்பிடுவது கிடையாது. நினைத்ததை பிடித்தபோது சாப்பிடுகிறேன்.

தீபாவளி/பொங்கல் போன்ற பண்டிகைகள் கொண்டாட விருப்பம் இருப்பதிலை. வீட்டாரின் வற்புறுத்தலின் பேரிலே புத்தாடைகள் அணிகிறேன்.
ஆனால் பல நேரங்களில் அலுவலகத்திற்குப் பயணிக்கும்போது கடவுளை(எங்கள் ஊரில் உள்ள முத்துமாரியம்மனை)
மனதில் நினைத்துக் கொள்வது உண்டு. ஆனால் கடவுளிடம் எந்தக் கோரிக்கையும் வைப்பது இல்லை.

சில முக்கியமான விசயங்களைத் தொடங்கும் போது முத்துமாரியம்மனை மனதில் நினைத்துக் கொள்வது உண்டு.

அதவது இந்த விசயத்தில், பண்டிகைகள் கொண்டாடியோ, கோவிலுக்குச் சென்றோ கடவுளைத் தேட வேண்டியது இல்லை. கடவுளை
நினைத்த இடத்தில் இருந்தே நினைத்துக் கொண்டாலா, மனதில் வணங்கிக் கொண்டாலோ போதும் என் நினைப்பவன்,

என்னைப் போன்றவர்களை நாத்திகவாதிகள் என்றும் சொல்ல முடியாது. கடவுளே இல்லையென்று சொல்பவ்ர்கள் அவர்கள்.
ஆத்திகவாதியும் கிடையாது. கடவுள் இருக்கிறார் என்று சொல்லி அவருக்கு என்று உள்ள சில விதிமுறைகளையும்(விரதம், பண்டிகைகள் கொண்டாடுவது etc..) கடைபிடிப்பது இல்லை.

ஆனால் நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு நான் தரும் ஒரு வடிவம் நான் நினைத்துக் கொள்ளும் முத்துமாரியம்மன்.
வேறு சிலருக்கு வேறு வடிவங்கள் இருக்கலாம். அந்த சக்திக்கு 'கடவுள்' என்ற ஒரு பொதுப்பெயரும் உண்டு.

எனக்கு இருக்கும் இத்தகைய சிந்தனைகளை யாரிடமும் தினிப்பதும் இல்லை.

என்னைப் போன்ற சிந்தனை உள்ளவர்களை எந்த வகையில் சேர்ப்பது?

16 comments:

கால்கரி சிவா said...

//கடவுளை
நினைத்த இடத்தில் இருந்தே நினைத்துக் கொண்டாலா, மனதில் வணங்கிக் கொண்டாலோ போதும் என் நினைப்பவன்//

//என்னைப் போன்ற சிந்தனை உள்ளவர்களை எந்த வகையில் சேர்ப்பது? //


நீங்கள் தான் இந்து

குமரன் (Kumaran) said...

மகேஸ். என்னைப் பொறுத்த வரை நீங்கள் ஆத்திக வாதி தான். ஆத்தகவாதி என்றால் நீங்கள் சொல்வது போல் விதிமுறைகளை எல்லாம் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. :-)

J said...

நீங்கள் "Agnostic "என்று அழைக்கப்படும் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி கவலைப்படாத வகையை சேர்ந்தவர் என்றுதான் நினைக்கிரேன்.நீங்கள் எந்த முன் முடிவும் எடுக்காமல் "Cosmos" பற்றியும் "பரிணாமம்" (Evolution)பற்றியும் ஒரு clean slate மன நிலையுடன் Google ல் தேடி படியுங்கள். Richard Dawkins எழுதிய "The Selfish Gene" படியுங்கள்.தெளிவு நோக்கிய பயணம் அமையக்கூடும்.All the best.

Muthu said...

வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை மகேஷ்.

மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை அல்லவா.உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருக்கிறீர்கள் அல்லவா?யாருக்கும் கெடுதல் தீங்கோ நினைப்பதில்லை அல்லவா?

அப்படியானால் நீங்கள் மனிதன் என்ற பிரிவில் வருகிறீர்கள்.அதுதான் பெரிய முக்கியமான பிரிவு.மீதியெல்லாம் அவ்வளவு முக்கியமல்ல.

நாத்திகம் என்ற வார்த்தை இங்கு திரிக்கப்பட்டு அசிங்கப்படுத்தபடுவதால் உங்களுக்கு இந்த ஃபிலிங் என்று நினைக்கிறேன்.

Unknown said...

நீங்க நல்லதொரு மனிதர்.உங்க பதிவை படிச்சுட்டு அது மட்டும் உறுதியா சொல்ல முடியுது.அப்படி இருந்தாலே போதுமானது.சாமி கோவிச்சுக்காது

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பரே!,

கண்னதாசனின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:
"உண்டென்றால் அது உண்டு;
இல்லை என்றால் அது இல்லை."

உண்டு என்பவன் ஆத்திகவாதியாகவும், இல்லை என்பவர்களை நாத்திகவாதியாகவும் இனப்படுத்தியவர் யார்?
நான் கூறுகிறேன்:"உண்டு என்பவன் நாத்திகவாதி; இல்லை என்பவன் ஆத்திகவாதி."

இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் யார்? குழப்புகிறேனா?

நாமாக உருவாக்கிய பிரிவினைகளைப் புறம் தள்ளுங்கள். மனிதனாக வாழுவோம். நம்மில் உள்ள தீயகுணங்களை களைவோம். அது போதும் மனிதனாக வாழ.

இறுதியில் ஒரு வினா?
"சிவவாக்கியர் உருவழிபாட்டைத் தாக்கியவர். அவர் ஆத்திகனா? நாத்திகனா?"

G.Ragavan said...

நீங்கள் ஆத்திகர்தான். எந்தச் சந்தேகமும் இல்லை.

சந்திப்பு said...

செல்வன், முத்து ஆகியோர் வழிமொழிந்ததை நானும் முன்மொழிகிறேன்.
இங்கே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடலை நினைவு கூர்வோம்:

கடவுள் இருக்கும் என்பதும், இல்லை என்பதும் ..... உதவாத வெறும் பேச்சு...
அதே சமயம் உண்மை எது என விஞ்ஞானப்பூர்வமாக அறிந்து கொள்ள முயன்றால் அது எந்த நேரத்திலும் உங்களுக்கு கைகொடுக்கும். வாழ்த்துக்கள்.

Anonymous said...

அன்பு மகேஸ்!

"நான் நாத்திகவாதியா? ஆத்திகவாதியா?"

-இந்தக் கேள்வி ஒருவனுக்குள் எழுகின்ற கணத்திலேயே அவன் தன்னுள் இருக்கும் கடவுளை உணரத் தொடங்கிவிட்டான் என்றே அர்த்தப்படுகிறது.

நீங்கள் ஆத்திகவாதியென்றோ நாத்திகவாதியொன்றோ எப்படி வேண்டுமானாலும் பேர் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்குள் உருவாகும் கடவுள் தன்மை உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தும் என்பதே உண்மை.

எவருடைய வழிகாட்டலில் நீங்கள்
வழிபாடு இயற்றுகிறீர்களோ நீங்கள் அந்தச் சமயத்தைச் சார்ந்தவர்.
அதனால் இப்போது நீங்கள் இந்து.

எந்தமதத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அந்த மதத்தின்படி ஒழுகுகிறீர்களா என்பதே முக்கியம்.
அவ்வாறு தன் மதத்தின்வழி ஒழுகுகிறவன் எவனும் மற்றவர்களை நிந்திப்பதில்லை. அதனால் இறைவனையும் நிந்திப்பதில்லை.


கடவுளைப்பற்றிச் சிலர் தாக்குவதுபோலத் தெரியும்.
ஆனால் நன்கு கவனித்துப்பார்த்தால் அவர்கள் மனிதனுக்குள்ளிருக்கும் கடவுள்தன்மைக்கு விரோதமானவர்களையே கடிந்துகொள்கிறார்கள் என்பது புலனாகும்.

யார் ஆத்திகர்? யார் நாத்திகர்?
தன்னை உணர்ந்தவர் - தன்னை உணர்பவர் எல்லோருமே ஆத்திகர்.
உணராதவரைமட்டுமே அவர் நாத்திகர்.

மகேஸ் யார் என்பதை இனி நீங்களே
தெரிந்துகொள்ளலாம்.

மகேஸ் said...

அலுவலகப் பணிகள் அதிகம் இருப்பதால் என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இன்று மாலை அனைவருக்கும் பதில் அளிக்கிறேன்.
நன்றி.

Geetha Sambasivam said...

first you are a true humanbeing not compelling others and doing your work only. this seems you are a true believer in God which you could not understand. no matter which religion you are belonging, but a true believer in God.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நான் நாத்திகவாதியா? ஆத்திகவாதியா?"

இதே கேள்வியை என்னுள் கேட்டதுண்டு, ஓரு பத்து வருடத்துக்குள், நான் மிகவும் மாறிவிட்டதாக தோனுகிறது. இப்பொளுதெல்லாம் கோவிலுக்கு போனாலும், எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், குறிப்பாக சொன்னால் பயமில்லாமல் அதே சமயத்தில் யோகா செய்கின்ற மனநிலையில்.

எனக்கு உள்ள் குழப்பமெல்லாம், நான் எப்படி என்னோட குழந்தைகளுக்கு முன் மாதிரியாக நடந்து கொள்வது?.

சிவமுருகன் said...

உங்களை போன்றவர்களை 'நிஷ்காம கர்ம யோகி' என்பார்கள்.கடவுளிடம் எதையும் எதிர்பார்க்கமல் தன் கடமையை செய்பவர்கள்.

எனில் நீங்கள் ஆஸ்திகரே.

மகேஸ் said...

கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் என் நன்றிகள் பல.

ஜவகர் அவர்கள் அவர்கள் கூறிய Agnostic என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடிய போது
இப்படி விளக்கம் கிடைத்தது. "A person who doubts truth of religion"
மதங்களின் மீது சந்தேகம் கொள்பவர் என்று நேரடியாக மொழிபெயர்க்கலாமா என்று தெரியவில்லை.
ஆனாலும் கொஞ்சம் புரிகிறது.

முத்து ( தமிழினி) கூறிய படி யாருடனும் நான் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை.
எனவே ஒரு சாதாரண மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்.

இதற்கிடையில் என் வகுப்பு தோழன் தொலைபேசியில் என்னைப் கூறிய கருத்து.
"நீ எந்தச் சிறு வசயத்திலேயும் ஆதாரம் இல்லாமல் நம்பக் கூடியவன் இல்லை.
கடவுள் இருக்கிறார் என்று யாராவது கூறினாலும் ஆதாரம் கேட்க நினைக்கிறாய்.
ஆனால் அதை நிரூபிக்க முடியாது என்று உனக்குத் தெரியுமாதலால் யாரிடமும் நிரூபணம் கேட்டு மேற்க்கொண்டு விவாதிப்பது இல்லை.
இப்படிப்பட்ட மனப் போராட்டத்தால் பாதிக்கப் பட்டுள்ளதால் தான் எந்தப் பண்டிகைகளிலும் ஆர்வத்துடன் கலகலப்பாக இருக்கமுடிவதில்லை என்கிறான் என் நண்பன்"

அனைவரின் கருத்துகளுக்கும் என் நன்றிகள்.

நான் மேலும் இது பற்றிச் சிந்திக்காமல் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

Sivabalan said...

கடவுள் தன்மை, THIS IS MORE IMPORTANT WORD. This is what Mankind wants make in every human being from the beginning.

But there is no super power, there is no God.Every thing we have made to make கடவுள் தன்மை (Means a true man) in human beings.

I think you are in a verge of become an atheist.

This is my opinion.