Tuesday, May 23, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 6


காய்கறிக்கடையில் சில்லறை விற்பனை செய்வது கொஞ்சம் சிரமம் தான். மொத்த வியாபாரம் என்றால் வியாபாரிகள் வேணும் காய்கறிகளை எழுதிக் கொடுத்து விடுவார்கள். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் கேட்ட காய்கறிகளை எடை போட்டுக் கொடுத்துவிடுவோம். ஆனால் சில்லறை வியாபாரத்தில் நம் பெண்மணிகளுடன் தினம் தினம் போராட்டம் தான். இந்த வியாபாரத்தில் பீக் ஹவர்ஸ் காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரையும் மாலை 7 மணிமுதல் 9மணி வரையிலும். காலை 9.30 மணி முதல் 12.30 வரை வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளும், மாலை 7 மணிமுதல் 9மணி வரையில் அலுவலகம் செல்லும் பெண்களும் அதிகம் வருவார்கள். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இங்கு கணக்குப் பார்த்து காசு வாங்கிப் போடுவதும் அனுபவம் இல்லையெனில் சிரமம் தான். கூட்டம் அதிகமான நேரங்களில் யார் யாருக்கு என்னென்னெ காய்கள் கொடுத்தோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதும் சிரமம் தான். பெரும்பாலும் அவர்களையே என்னென்ன காய்கள் வாங்கினீர்கள் என்று கேட்டுத்தான் பணத்தைக் கணக்கிடுவோம். அவர்கள் பெரும்பாலும் 99% ஏமாற்ற மாட்டார்கள். ஏமாற்ற நினைத்து மாற்றிச் சொல்ல ஆரம்பித்தால் தடுமாற ஆரம்பித்து விடுவார்கள். அதனை வைத்தே நாங்கள் உஷாராகி கொஞ்சம் அழுத்திக் கேட்க ஆரம்பித்தால் சரியாகச் சொல்லிவிடுவார்கள்.

கணக்கீடு செய்வதும் மனக்கணக்குதான். அவர்கள் வாங்கிய காய்கறியின் அளவைச் சொல்லச் சொல்ல உடனே கூட்டிக் காசை வசூலிப்போம்.
கத்தரிக்காய் கால் கிலோ - 2.50
தக்காளி 100 - 1.25
காரட் 100 - 2.00
பச்ச மிளகாய் 1.00
உடனே கூட்டி 6.75 என அடுத்த 3 நொடிகளில் சொல்லி மீதப் பணம் அடுத்த 5-10 வினாடிகளில் கொடுத்து அடுத்த வாடிக்கையாளரைப் பார்க்க வேண்டும். இந்தக் கணக்கையெல்லாம் அனுபவித்துச் செய்தால் சோர்வு வராது. வெகு சில நேரங்களில் கூட்டுதல் தவறாகி ஒரு ரூபாய்/இரண்டு ரூபாய் கூடவோ குறையவோ ஆகலாம். யாராவது வந்து திருப்பிக் கேட்டால் மறுபேச்சு இல்லாமல் திருப்பிக் கொடுத்து விடுவோம். குறைவாகக் கண்க்கீடு செய்திருந்தால் யாரும் காசைத் திருப்பித் தர வரமாட்டார்கள். இது தானே உலக நியதி.

மேலும் பெண்கள் தேவையான எல்லாக் காய்களையும் மொத்தமாக எடைபோட எடுத்து வரமாட்டார்கள். ஒவ்வொன்றாகவே போய் எடுத்துவருவார்கள். சரியாகக் கணக்கு வைத்துக் கொள்ள அதுவும் எங்களுக்குச் சிரமம் தான். பல பெண்கள் காய்கறிகடைக்கு வந்துதான் என்ன சமையல் செய்யலாம் என யோசனை செய்வார்கள்(என்னக்கிதான் முன் யோசனையுடன் செய்தார்கள் என்கிறீர்களா?? :)) ). சிலரோ அடுப்பில் பருப்பு கொதிக்குது சீக்கிரம் காய்கறி தாங்க என்று காலில் வெந்நீரை ஊற்றியது போல பரபரப்பாக வந்து நிற்பார்கள், அவர்க்களையும் வேகமாகக் கவனித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

சில ஆண்களும்/குழந்தைகளும் கடைக்கு வருவார்கள். ஆண்களுக்கு எடை போட்டுக் கொடுக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருந்து அழுகிய/பூச்சி விழுந்த காய்கறிகளையோ எடுத்து வந்திருந்தால் அவற்றை எடுத்துப் போட்டுவிடுவோம். இல்லையெனில் அடுத்த பத்தாவது நிமிடம், விவரம் தெரியாதவரை(??!!) ஏமாற்றி விட்டதாக அவரின் வீட்டுக்காரம்மா சண்டைக்கு வந்து விடுவார். சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

குழந்தைகள் வந்தால் நாங்களே நல்ல காய்கறிகளாகப் போட்டு அனுப்புவோம். எடையும் சற்று அதிகமாகவே போடுவோம். இல்லையெனில் சிறு குழந்தைகளை எடையில் ஏமாற்றி விட்டார்கள் என்ற அவச்சொல் எங்களுக்கு வரும். குழந்தைதைகளிடம் சிறு பிரச்சினை என்னவெனில் மீதக் காசைக் கொடுத்து அனுப்புவது தான். சில சமயங்களில் தவற விட்டு விட்டார்களெனில் சில சமையங்களில் தாய்மார்கள் நாங்கள் தான் ஏமாற்றி விட்டதாகச் சண்டைக்கு வருவார்கள். விளக்கமாகச் சொல்லிச் சமாளிக்க வேண்டும் நேர விரயமாகும். எங்களை நன்கு புரிந்து கொண்டவர்கள் அடுத்த முறை பெரியவர்கள் கடக்கு வரும்போது காசு தருவதாகச் சொல்லி அனுப்புவார்கள். நாங்களும் கேட்கும் பொருட்களைக் கொடுத்து அனுப்புவோம்.

அடுத்த பதிவு இரண்டாம் நம்பர் காய்கறிகள் பற்றி..

2 comments:

Anonymous said...

"என்னக்கிதான் முன் யோசனையுடன் செய்தார்கள் என்கிறீர்களா?? :)) )."

இதுவும் அனுபவம்தானா மகேஸ்!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.

மகேஸ் said...

வாங்க துபாய் ராஜா.
எனக்கு நேரடியான அனுபவமெல்லாம் எல்லாம் கண்டது, கேட்டது படித்தது தான்.

என்னன்னு தெரியல வழக்கமா காய்கறிக் கடைக்கி வர்றவுங்க கூட இன்னக்கி வரல. அவங்க புதன்கிழமை வீட்டுல அசைவமா இருக்கும் போல.