Saturday, April 29, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 2

கலப்படம். இது இரண்டு வகைப்படும். ஒன்று தரமான ஒரு பொருளுடன் அதனைவிடத் தரம் குறைந்த அதே பொருளைக் கலந்து விற்பது. மற்றொன்று ஒரு பொருளுடன் அதே நிறம் அல்லது மணம் அதே போன்ற தன்மையுடைய வேறு ஒரு பொருளைக் கலந்து விற்பது ஆகும்.

முதலாவதில் நுகர்வோருக்கு எதுவும் உடல் ரீதியான பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் தரம் குறைந்த ஒரு பொருளை தரமான பொருளின் விலையில் வாங்குகிறார். நான் பார்த்தவரையில் எல்லாப் பொருட்களிலும் இந்த வகைக் கலப்படம் செய்யப்பட்டது. இல்லையென்றால் வியாபாரத்தில் போட்டியைச் சமாளிக்க முடியாது என்பது என் முதல்லளியின் எண்ணம்.

இரண்டாவதில் லாபம் மட்டுமே நோக்கம். கடலை எண்ணையில் விளக்கெண்ணையைக் கலப்பது போன்ற செயல்கள். இதில் கலப்பட அளவு என்பது மிகவும் முக்கியம். 15கிலோ கடலை எண்ணையில் ஒன்னேகால் கிலோ வரை விளக்கெண்ணை கலந்தால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. ஒரு முறை மனசாட்சிக்குப் பயந்து விளக்கெண்ணை கலப்பது பாவம் இல்லையா முதலாளி என்று கேட்டுவிடேன். அதெல்லாம் இல்லப்பு, விளக்கெண்னை நல்ல மலமிளக்கி. அதனால் உடலுக்கு மிகவும் நல்லது என்று சப்பைக்கட்டு கட்டினார்.

இனிப்புத் தன்மை அதிகமாக உள்ள முதல் தர சர்க்கரையில்(சீனி), இனிப்புத்தன்மை குறைந்த சர்க்கரையைக் கலப்பது,கடுகில் ஆர்கிமோன் விதைகளைக் கலப்பது, நெய்யில் வனஸ்பதியைக் கலப்பது போன்றவை நான் சாதாரணமாகக் கண்ட கலப்படங்கள்.

இது போன்ற கலப்படங்கள் பெரும்பாலும் 100கிராம், 50 கிராம் என்று வாங்கும் அன்றாடம் காய்ச்சி மக்களைக் குறிவைத்துதான்.

சென்னையில் நான் இருந்த போது சில பெரிய கடைகளில் பாக்கெட்டில் அடைத்து வைத்திருக்கும் பொருட்களில் நான் இது போன்ற கலப்படங்களைப் பார்த்தது இல்லை. ஆனால் அவற்றின் விலையும் சற்று அதிகம்தான். காசுக்கேற்ற தரம்.

முடிந்தவரை தெருவோரக் கடைகளில் விற்கும் மிக்சர், பக்கோடா போன்ற எண்ணைப் பலகாரங்களை வாங்கி உண்ணாதீர்கள். அவைகள் அனைத்தும் கலப்பட எண்னை, மற்றும் மாவுப் பொருட்களில் செய்யப்பட்டவை.

என் முதலாளியிடம் எனக்குப் பிடித்தது, ஒரு மாதச் சம்பளமாக 350 ரூபாய் கொடுத்தார். கொடுக்கும் போது சாப்பிட்ட பேரீச்சம் பழங்களுக்கெல்லாம் கணக்குப் பார்த்தால் நீதாம்பு காசு தரணும். ஒரு வாட்ச் வாங்கனுமுன்னு சொன்னீயே, இத வச்சி வாங்கிக்கோன்னு சொன்னார். தொழிலாளிகளிடம் வேலை வாங்கத் தெரிந்த மனிதர்.

ஒரு மாதம் மளிகைக்க்டையில் இருந்து நான் தெரிந்து கொண்டவைகள்தான் இவைகள். அடுத்த பதிவு என் காய்கறிக்கடையில் இருந்து.

8 comments:

Sam said...

//சாப்பிட்ட பேரீச்சம் பழங்களுக்கெல்லாம் கணக்குப் பார்த்தால் நீதாம்பு காசு தரணும்//

இதை எப்படி கண்டு பிடிச்சார்? :))
சுவையான பதிவு

அன்புடன்
சாம்

மகேஸ் said...

மாதம் ஒரு முறை ஒரு சாக்குப்பை வியாபாரி வந்து பழைய சாக்குகளை (கோணி)வாங்கிச் செல்வார். அதற்காக கடையை ஒழுங்குபடுத்தும் போது ஒரு கோணிப்பைக்குள்ளே பேரீட்சைக் கொட்டைகளும், நான் பதுக்கி வைத்திருந்த பழங்களும் அகப்பட்டு விட்டன. நானாவது சும்மா இருந்திருக்க வேண்டும், ஐயா, பெருச்சாளி(பெரிய எலி) ஈச்சம் பழத்தை இழுத்துக் கொண்டு போய் வச்சிருக்குறதப் பாருங்கன்னு சொல்லிட்டேன், அவர் என்ன விவரம் தெரியாதவரா? சிரித்துக் கொண்டே பெருச்சாளி இல்லப்பா, புதுசா கடைக்கி வந்துருக்குற சின்ன எலியோட வேல இதுன்னு சொல்லிப் பிடித்து விட்டார்.

துளசி கோபால் said...

நல்ல பதிவுதான்.
ஏழைகள் ஏமாறவே இருக்காங்களோ?
பாவமில்லையா அவர்கள்.

மகேஸ் said...

வாங்க துளசியக்கா,
என்ன செய்றது, பண முதலைகள் யாரைப் பற்றியும் கவலைப் படுவதில்லையே.

பொன்ஸ்~~Poorna said...

ஏங்க, அந்த பேரிச்சம்பழக் கொட்டை எல்லாம் கடைலியேவா வைப்பீங்க? வெளில போட்ருக்க வேண்டாம் :)

மகேஸ் said...

பொன்ஸ்,
கொட்டையை எப்படி வெளியே கொண்டு போவது என்பதில் தான் பிரச்சினையே. ஒன்னா ரெண்டா, தினமும் அரைக்கிலோ அளவிற்குத் தின்றால் கொட்டையை எப்படிக் கடத்த முடியும்! நம்ம முதலாளி வேறு வீட்டிற்குப் போகும் போது நமக்கே தெரியாமல் ஸ்கேன் பண்ணுற மாதிரிப் பாத்துத்தான் அனுப்புவார்.

கடையில் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். என்ககு பேரீட்சை. மற்றொரு நபர், வாயில் கொஞ்சம் பொரிகடலை(பொட்டுக் கடலை)ப் போட்டு மென்று கொள்வார். பின்னர் கொஞ்சம் சீனியையும் வாயில் போட்டுக் எப்போதும் வாயில் அரைத்துக் கொண்டே இருப்பார்.

பொன்ஸ்~~Poorna said...

//கடையில் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். //
இப்போ தாங்க புரியுது.. ஏன் கலப்படம் பண்ணறாங்கன்னு.. இப்படி நீங்களே காலி பண்ணினால், கடை முதலாளி கலப்படம் பண்ணாம என்ன பண்ணுவாரு ? :)

மகேஸ் said...

//இப்படி நீங்களே காலி பண்ணினால், கடை முதலாளி கலப்படம் பண்ணாம என்ன பண்ணுவாரு //
ஹாஹா...

எங்களுக்குப் பயந்து, முந்திரிப்பருப்பு மூட்டையை தன் கண்ணெதிரிலேயே வைத்திருப்பார்.

எந்தச் சின்ன விஷயமானாலும் மிகுந்த கவனமுடன் இருப்பார். ஒவ்வொரு நாளும் இரவில் கடை அடைக்கும் முன், விளக்குகளை அணைத்துவிட்டு தட்டுத்தடுமாறிக் கடையின் உள்ளே சுற்றி வருவார். ஏனென்றால் அது பழைய கட்டிடம். மின்கசிவு ஏதாவது ஏற்பட்டு தீப்பொறிகள் கண்ணுக்குத் தெரிகிறதா என்று பார்த்துவிட்டுத்தான் வருவார். வெள்ளிக்கிழமை கடைகளுக்கு சாம்பிராணி போடவரும் மனிதருக்கு காசு கொடுத்து சாம்பிராணி போடவேண்டாம் என தூரத்தில் வரும் போதே துரத்திவிடுவார். சும்மாவா 10 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் உள்ளனவே.