Sunday, May 07, 2006

நெசவாளர்கள்->கஞ்சித்தொட்டி<-வணிகர்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டி திறந்தும் அதற்கு எதிர்ப்பாக பிரியாணி வழங்கி ஒரு அரசியல் கட்சி நம்முடைய மானத்தை வாங்கியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

நெசவுத் தொழிலுக்கு என்று பல நவீன ஆலைகள் வந்துவிட்டன். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் செய்யும் வேலையை இயந்திரங்கள் செய்துவிடுகின்றன அதுவும் மிகுந்த தரத்துடன். இந்தக் காரணம் நாம் பள்ளியிலேயே படித்ததுதான். இந்தத் தொழிற்புரட்சியில் நம்முடைய நெசவாளர்கள் வருகின்ற விபரீத்ததை உணர்ந்து வேறு சில தொழில்களைக் கற்று தொழிலை மாற்றியிருக்க வேண்டும். எல்லோருமே குறைந்த செலவில் தான் எதையும் வாங்க விருப்புவார்கள். இயந்திரப் புரட்சி அதற்குத் துணை போய்விட்டது. இது தவிர்க்க முடியாதது தான்.

1950களில் இந்தியாவில் இயந்திர நெசவுக்கூடங்கள் நிறுவப்பட்ட போது நிலைமையை உணர்ந்து வேறு சில தொழில்களுக்கு மாறியிருக்க வேண்டும். சமீபத்தில் நெசவாளர் ஒருவரின் பேட்டியைக் கண்ட போது, தாங்கள் ஆறு தலைமுறைகளாக நெசவுத் தொழில்செய்து வருவதாகவும் தங்களுக்கு வேறு தொழில் தெரியாது என்றும் கூறினார். அவரின் மகன்களும் அதே தொழிலில் இருப்பதாகவும் மிகவும் கஷ்டப் படுவதாகவும் கூறியவுடன் அவர் மீது என்க்குக் கோபம் வந்தது. ஆரம்ப காலம் முதல் ஒரே வேலையை எந்த வித மாற்றமும் இல்லாமல் செய்து வந்தால் எப்படி முன்னேறுவது? நெசவுத் தொழிலில் சிரமம் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே தெரியவந்தது. அதை உணர்ந்து அவரின் பிள்ளைகளை வேறு தொழில்களுக்கு மாற்றியிருந்தால் நிலைமை இவ்வளவு தீவிரமாக இருந்திருக்காது.

இது பற்றிய விழிப்புணர்ச்சியை அரசாவது செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களுக்கு மானியம், அரசே கைத்தறித் துணிகளை வாங்குவது போன்ற தற்காலிக நடவடிக்கைகளை எடுத்து தற்போது நிலைமையை மேலும் சிக்கலாக்கி விட்டது.

இப்போது தலைப்பிற்கு வருகிறேன். இங்கு வணிகர்கள் எங்கு வருகிறார்கள்?

சில்லரை வணிகத்தில் வால்மார்ட், டெஸ்கொ போன்ற நிறுவனங்கள் அனுமதிகோரி மன்மோகன் சிங் அரசை அனுகியிருக்கிறது. அரசு அனுமதித்தால் வணிகர்கள் 10 ஆண்டுகளில் தெருவுக்கு வருவதைத் தடுக்க முடியாது. வால்மார்ட், டெஸ்கொ போன்ற நிறுவனங்கள் பல வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று சொல்வார்கள். ஆம் அவைகள் பல தொழிலாளர்களை உருவாக்கும். முதலாளிகளை அல்ல. முதலாளிகளே அரசுக்கு வரி செலுத்துபவர்கள். டெஸ்கோ போன்ற நிறுவனங்களும் வரி செலுத்தும், ஆனால் லாபத்தை இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்லும். அது மிகவும் ஆபத்தானது. நம்முடைய வணிகர்கள் வரி ஏய்ப்புச் செய்தாலும் பணம் நம்முடைய நாட்டை விட்டு வெளியே செல்லாது. விதிகள்/சட்டங்கள் கடுமையாக்கப் பட்டால் வரி ஏய்ப்பைத் தடுத்து விட முடியும். ஆனால் அவர்களை உள்ளே விட்டால் கூடாரத்தினுள் ஒட்டகத்தை விட்ட கதை தான்.கூடாரம்/நம்முடைய நாடு சாயாமல் இராது.

இதற்குச் சிறந்த உதாரணமாக பெப்ஸி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவு காரணமாக நம்ம ஊர் மாப்பிள்ளை விநாயகர், கோல்ட் ஸ்பாட் போன்ற நிறுவனங்கள் மறைந்து விட்டன. மாப்பிள்ளை விநாயகர் பன்னீர் சோடாவின் சுவையை பெப்ஸி, கோக் போன்றவற்றில் காணமுடியுமா?

அப்போது நம்முடைய சிறு மற்றும் குறு வணிகர்களுக்கும் கஞ்சித் தொட்டி வைக்க வேண்டிய நிலை வரும்.
வணிகர்களே நீங்களும் குடும்பத் தொழில் என்று உங்களின் வாரிசுகளை ஒரே விதமான வணிகத்திலேயே ஈடுபடுத்துகிறீர்கள். தொலைநோக்கில் இது மிகவும் ஆபத்தானது.

நம்முடைய அரசின் சில செயல்பாடுகள் புரிந்து கொள்ள முடியாதபடி உள்ளன. ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை முன்னெற்ற குடும்பத்தலைவி செலவுகளைக் குறைக்கிறார். பக்க வருமானத்தைப் பெருக்க வழியேதும் உள்ளதா எனப் பார்ப்பார். பொதுவாக தன்னுடைய குடும்பத்தின் பணம் வெளியே போகாமல் பார்த்துக் கொள்வார். சாதாரணப் படிப்பு படித்த பெண்ணிற்குச் தெரிந்த இந்தச் சிறிய அடிப்படை கூடத் தெரியாமல் அந்நிய நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடுகிறார்கள்.

உங்களில் பல பேர் கேட்கலாம், பல இந்திய இளைஞர்கள் அமெரிக்கா/ஐரோப்பிய நாடுகளில் வேலை பார்த்துப் பணம் சம்பாதிக்கிறார்கள், எனவே அந்நாட்டு நிறுவனத்தை நம் நாட்டில் அனுமதிப்பது தானே தர்மம்/நியாயம் என்று. மக்களே தர்மம் நியாயம் பார்த்தால் நம்முடைய நாட்டை முன்னேற்ற முடியாது. தர்மம் நியாயம் பார்த்தா நம்முடைய நாட்டை 300 ஆண்டுகள் சுரண்டினார்கள்?

4 comments:

மா சிவகுமார் said...

நான் சீனாவில் இருக்கும் போது பார்த்தது:

சீனாவில் பெரிய நகரங்களில் மட்டும், வெளிநாட்டு நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் கூட்டாக பேரங்காடிகளை அமைக்க அனுமதி கொடுத்துள்ளனர். ஜெர்மனியைச் சேர்ந்த மெட்ரோ என்ற நிறுவனத்தின் விற்பனை நிலையத்தில் கிராமப்புறங்களிலும், புற நகர் பகுதிகளிலும் சில்லறை வியாபாரம் நடத்தும் சிறு வியாபாரிகள் மொத்தமாக பொருட்கள் வாங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.

எப்படிப் பார்த்தாலும், இத்தகைய பெரு நிறுவனங்கள் ஒரு பகுதியில் திறக்கப்படும்போது, உள்ளூர் பொருளாதாரம் பல வகைகளில் பாதிக்கப்படும். அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசு கொள்கைகள் அமைய வேண்டும். இத்தகைய நிறுவனங்கள், தாம் பொருட்கள் வாங்கும் விதத்தில் ஏகபோக வலிமை பெற்று, விற்பனையாளர்களை கசக்கிப் பிழிந்து விடுவார்கள்.

அமெரிக்காவில் கூட வால்மார்ட்டினால் சிறிய ஊர்களில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விவாதங்கள் நடக்கின்றன.

Karthikeyan said...

ரொம்ப யோசிக்க வைத்த பதிவு... பரம்பரையாக ஒரே தொழிலைத்தான் செய்கிறோம் வேறு போக்கிடம் ஏது? என்று கேட்பது ஒரு பக்கம் இருக்க, அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் சிக்குவது அதைவிட வேதனை... கஞ்சித்தொட்டி, பிரியாணித்தொட்டி எல்லாம் வைத்து, அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயத்திற்கு மனிதநேயம் சாயம் பூசிக்கொள்கிறார்கள்...

"பசியிலிருப்பவனுக்கு மீன்கள் தருவதற்கு பதில், மீன் பிடிக்க கற்றுக்கொடு". புதியத்தொழில்களுக்கான வாசல்கதவை அரசாங்கமே திறக்கட்டுமே?

அன்புடன்
கார்த்திகேயன்

மகேஸ் said...

சரியாகச் சொன்னீர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் அவர்களே.
நாம் கடல் கடந்த வணிகத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டு வந்துள்ளோ. அமெரிக்கர்கள் நமக்கே வந்து நவீன வியாபாரத்தைக் கற்றுத் தர நினைக்கிறார்கள்.

Anonymous said...

ஜோ பூ கொடுக்கப்போறாங்களா இல்ல அல்வா கொடுக்கப்போறாங்களா ;0) கலக்குங்க..

அந்நியன்.